TET - உயர் நீதிமன்றத்தில் வழக்கு

ஆசிரியர் தகுதித் தேர்வு சட்ட விரோதமானது என அறிவிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பாக திருவண்ணாமலை மாவட்டம், போளூரைச் சேர்ந்த க. ரங்கநாதன் மனு தாக்கல் செய்திருந்தார்.
       இந்த மனு மீது நீதிபதி என். பால் வசந்தகுமார் புதன்கிழமை விசாரணை நடத்தினார். அப்போது, இந்த மனு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் நான்கு வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்யும்படி நீதிபதி உத்தரவிட்டார். மனு விவரம்: நான் கடந்த 2004-ம் ஆண்டு ஆசிரியர் பயிற்சிக்கான பட்டயப் படிப்பை முடித்துள்ளேன்.

    அதே ஆண்டில் வேலைவாய்ப்பு அலுவலகத்திலும் பதிவு செய்து வேலைக்காக காத்திருக்கிறேன். விரைவில் ஆசிரியராக நியமிக்கப்படுவேன் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதுவதற்கான அறிவிக்கையை கடந்த 2011-ம் ஆண்டு ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் வெளியிட்டது. 

    இதன்படி ஆசிரியர் நியமனத்துக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் என்று மாநில தொடக்கக் கல்வித் துறையும், மாநில ஆசிரியர் தேர்வு வாரியமும் கூறியுள்ளன. ஏற்கெனவே ஆசிரியர் பயிற்சி முடித்து, பயிற்சிக்குப் பின் தேர்வு எழுதி, அந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றதன் மூலம் ஆசிரியர் பணி நியமனத்துக்கான தகுதியை நான் பெற்றுள்ள நிலையில், மீண்டும் ஒரு தகுதித் தேர்வு எழுதச் சொல்வது சட்ட விரோதம் என்று அந்த மனுவில் ரங்கநாதன் கூறியுள்ளார்.

Popular Posts